.கணிதமே அடிப்படை
நாம் சமைக்கும் உணவுக்கும், உடுத்தும் உடைக்கும் இருக்கும் இருப்பிடத்திற்கும் கணிதமே அடிப்படை என்பதை யாராலும் மறுக்க முடியாது. பிறகு ஏன் சிலருக்கு மட்டும் கணக்கு கசக்கிறது. ஒரு செயலைச் செய்யும் போது அதில் ஆர்வத்தோடும் ஈடுபாட்டோடும் செய்தால் மட்டுமே வெற்றி கிட்டும். கணிதத்தில் அறிதல், புரிதல், தெளிதல், பயன்படுத்துதல், விடைகாணல், சரிபார்த்தல், நிரூபித்தல் இவையெல்லாம் முக்கியமானவை.
கணிதமும் கற்கண்டு தான்
அடிப்படை செயல்பாடுகளை முறையாக, தெளிவாக புரிந்து கொள்ளாததால் சில செயல்பாடுகளில்
குழப்பங்கள் வருகின்றன. இடமதிப்பு, இலக்கங்கள், எண்களின் வளர்ச்சி, அவற்றின் பயன்பாடு, அளவுகள், வடிவங்கள், பண்புகள், இவற்றின் தொடர் பயன்பாடு, சூத்திரங்கள், வரையறைகளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். புரிதல் இல்லாததால் தான் கணிதத்தை திறமையாக கையாள்வதில் இடர்ப்பாடுகள் வருகின்றன. ஒரு மாணவன் மீண்டும் மீண்டும் சில இடங்களில் தவறு செய்கிறான் என்றால், அவனுக்கு சரியாக பயிற்சி இல்லை; தெளிவு இல்லை என்று அறியலாம். சிலபேர், 'எனக்கு வகுப்பறையில் செய்யும் போது புரிகிறது; வீட்டில் செய்து பார்க்கும் போது புரியவில்லை, மறந்து விடுகிறது,' என்பர். தெளிவான புரிதல், படிப்படியாக அறிந்து புரிதல், திரும்ப திரும்ப செய்து பார்க்கும் பயிற்சி இருந்தால் கணிதமும் கற்கண்டு தான்.