தஞ்சைப் பெருவுடையார் கோயில்:
தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும் தஞ்சைப் பெரிய கோயில் அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. கிபி 11-ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜ சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தான். 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 ஆண்டு நிறைவடைந்தது.
இக்கோயில் தமிழகத்தின் மிகமுக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. அழியாத சோழர் பெருங்கோயில்கள் என்ற பெயரில் இக்கோயில், கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் ஆகிய மூன்றும் யுனெஸ்கோ நிறுவனத்தால் பொது ஊழி உலகப்பாரம்பரியக் களப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதின் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில். இக்கோயில் தஞ்சை பெரிய கோயில், பெரிய கோயில், இராஜராஜேஸ்வர கோயில், இராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.
முதலாம் இராஜராஜ சோழனால் கட்டுவிக்கப்பட்ட இக்கோயில் துவக்ககாலத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும், 17ஆம் மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
வரலாறு:
முதலாம் இராஜராஜ சோழன் என்றழைக்கப்பட்ட சோழ அரசன் அருள்மொழிவர்மன் கனவில் அவனுக்கிடப்பட்ட ஆணையை நிறைவேற்றும் பொருட்டு, சோழர்களின் சிறப்பின் சின்னமாக விளங்கும் தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலைக் கட்டுவித்தான். இக்கோயிலின் கட்டுமான வேலைகள் முதலாம் இராஜராஜனின் 19 ஆவது ஆட்சியாண்டில் துவக்கப்பட்டு (கிபி 1003-1004) அவனது 25 ஆவது ஆட்சியாண்டில் முடிவுற்றது (கிபி 1009-1010). கோயிலின் வரைதிட்டத்தில், ஆள்கூற்று முறைமை, சமச்சீர்மை வடிவவியல் விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.இதைத் தொடர்ந்து அடுத்த இரு நூற்றாண்டுகள்வரை கட்டப்பட்டக் கோயில்கள், சோழர்காலத்தில் தமிழர்கள் செல்வத்திலும் கலையிலும் சிறப்புற்று விளங்கியதற்குச் சான்றாகவுள்ளன. சோழர்காலக் கட்டிடக்கலையின் புதுவித அமைப்பாக சதுரப் போதிகைகள் கொண்ட பன்முகத் தூண்கள் காணப்படுகின்றன.
தனித்துவமான தென்னிந்தியக் கோயில் கட்டிடக்கலைக்கும், சோழர்களின் ஆட்சி மற்றும் தென்னிந்தியாவில் தமிழர்களின் நாகரீகத்திற்கும் சான்றாக அமைந்துள்ள இக்கோயில், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வெண்கலச் சிலையுருவாக்கம் ஆகியவற்றில் சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.